பழநியில் காளைகளுடன் நேர்த்திக்கடன்
ADDED :1921 days ago
பழநி : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் நேற்று அலங்கரிக்கப்பட்ட காளைகளுடன் வந்து பழநியில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பழநி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் அதிகளவில் பழநி முருகனுக்கு தீர்த்த காவடி, அலகு குத்தி நேர்த்திக் கடன் செய்து வருகின்றனர்.நேற்று திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலிருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் நாட்டுக் காளைகளை அழைத்து வந்திருந்தனர்.இந்த காளைகள் முருகனுக்கு நேர்ந்து விடப்பட்டவை. இவற்றை ஆண்டுக்கு ஒருமுறை மலர்களால் அலங்கரித்து பழநி மலை கிரிவீதியை சுற்றிவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.இக்காளைகளை பாதுகாத்து வருபவர்கள் இவற்றுக்கு விவசாயம் உட்பட எந்தவித வேலைகளையும் அளிப்பதில்லை.இக்குழுவினர் 60 பேர் தீர்த்தக் காவடி எடுத்து வந்தனர்.