உலகங்காத்தான் கிராமத்தில் புதிய தேர் வெள்ளோட்டம்
ADDED :1826 days ago
கள்ளக்குறிச்சி : உலகங்காத்தானில் 10 லட்ச ரூபாய் மதிப்பில் செய்யப்பட்ட கூத்தாண்டவர், முத்துமாரியம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் கிராமத்தில் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் மற்றும் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஊர் முக்கியஸ்தர்கள், கிராம மக்கள் கோவிலுக்கென புதிதாக தேர் செய்ய முடிவு செய்து, 10 லட்ச ரூபாய் நிதி திரட்டினர். இந்நிலையில், புதிய தேர் கொண்டு வரப்பட்டு வெள்ளோட்டம் நேற்று காலை நடந்தது. கூத்தாண்டவர், முத்து மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக தேர் வெள்ளோட்டம் நடந்தது.