உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உழைப்பே நிரந்தரம்

உழைப்பே நிரந்தரம்

 மகனுக்கு  தங்கப் பொம்மையை பரிசளித்தார் பணக்காரத்தந்தை. ‘‘மகனே! வாழ்க்கையில் எதைத் தொலைத்தாலும், இதை தொலைத்து விடாதே.  சிரமம் ஏற்பட்டால், இதை விற்றால் பெரும் பணம் கிடைக்கும். அது உனக்கு கைகொடுக்கும்,’’ என்றார். இப்படி சில காலம் சென்றது. திடீரென தந்தை காலமானார்.  மகனும் தங்கப் பொம்மையை கண்ணுக்கு ஈடாகப் பாதுகாத்தான். ஒருநாள் தனது பண்ணைக்குச் சென்று விட்டு திரும்பியவன், பொம்மை இருந்த பெட்டியை திறந்தான்.  பொம்மையைக் காணவில்லை.எங்கு தேடியும் கிடைக்கவில்லை.  யாரோ  திருடியது தெரிந்தது. அவன் வேதனையில் ஆழ்ந்தான்.  அந்த நினைப்பிலேயே அன்றாட வேலைகளை மறந்தான். ஒரு கட்டத்தில் பெரும் நஷ்டமாகி, பண்ணையை விற்றான்.ஒருநாள்  வீட்டிற்கு அருகில் இருக்கும் கிராமத்துக்குச் நடந்து சென்றான். அப்போது அங்கு இருந்த விவசாயக் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்தான். அந்த வீட்டுப் பெரியவர் மகன்களிடம் பேசிக்கொண்டிருந்தார். ‘‘பிள்ளைகளே! நீங்கள் இன்றிருக்கும் நிலம், பொருள் ஆகியவற்றை நம்பாதீர்கள். இவை ஏதோ ஒரு காரணத்தால், நம் கையை விட்டுப் போய்விடும் நாள் வரலாம். உழைப்பே என்றும் நிலையானது. அது என்றைக்கும் சோறு போடும். நாம் இந்த நிலத்திற்கு எஜமானர்கள் என்பதற்காகவும், செல்வம் இருக்கிறதே என்பதற்காகவும் வயலுக்குள் இறங்கி உழைக்க தயங்கக் கூடாது. ஒருவேளை இந்த செல்வம் நம்மை விட்டுப் போனாலும், உழைப்பு  கைவிடாது’’ என்றார்.அவர்களும் அப்படியே செய்வதாக வாக்களித்தனர். இதைக் கேட்ட அந்த மகன், தனது தந்தையும் தங்கப் பொம்மைக்கு பதிலாக இத்தகைய அறிவுரையைத் தந்திருந்தால், செல்வம் பறி போயிருக்காதே என்று ஆதங்கப்பட்டான்.ஆம்...உழைப்பு மட்டுமே  நிரந்தரச் சொத்து. மற்றவை சூழ்நிலைகளால் அழியக்கூடியவை. இதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து  முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்வோம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !