சாமராஜேஸ்வரா தேர் உற்சவம் ரத்து
ADDED :1591 days ago
சாம்ராஜ்நகர்: இந்தாண்டு நடக்கவிருந்த சாமராஜேஸ்வரா தேர் உற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கன்னட ஆடி மாதத்தில் சாமராஜேஸ்வரா கோவில் ரத உற்சவம் நடத்தப்படும். இதில் பங்கேற்க, மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவர். கடந்த, 2017 ல் சமூக விரோதிகள், கோவில் முன் நிறுத்தப்பட்டிருந்த தேருக்கு தீ வைத்தனர். இதனால் தேர் சேதமடைந்தது. இதனால் புதிய தேர் தயாராகும் வரை, அந்த தேரை பயன்படுத்த வேண்டாம் என பக்தர்கள் கேட்டு கொண்டனர். இதையடுத்து, புதிய தேர் தயாராகி வருகிறது. புதிய தேர் தயாரிக்கும் பொறுப்பு, பெங்களூரை சேர்ந்தவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது, கொரோனா தொற்று பரவலாலும், புதிய தேர் தயாராகாததாலும் நடப்பாண்டு தேர் உற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.