அம்பை சங்கரலிங்க சுவாமி கோயிலில் ஆடித் தபசு கொடியேற்றம்
அம்பாசமுத்திரம்: கொரோனா பரவல் காரணமாக, அம்பாசமுத்திரம் சங்கரலிங்க சுவாமி கோயிலில் இன்று (13ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆடித்தபசு திருவிழாவில், தபசு வைபவம் கோயிலுக்குள் பக்தர்களின்றி நடக்கிறது. தெப்ப உற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரத்தை அடுத்த சின்ன சங்கரன்கோவிலில் பரிகார தலமாக விளங்கி வரும் கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோயிலில் இன்று (13ம் தி) காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தபசு திருவிழா துவங்கியது. கொடியேற்றத்திற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. நடப்பாண்டில், கொரோனா பரவல் காரணமாக, திருவிழாக்கள் நடத்த அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி, வீதி உலா நிகழ்ச்சிகள் அனைத்தும் சங்கரலிங்க சுவாமி கோயிலுக்குள் நடக்கிறது. 23ம் தேதி தாமிரபரணி நதிக்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடக்கும் தபசு காட்சி வைவம், கோயில் வளாகத்திற்குள் நடக்கிறது. 24,25ம் தேதிகளில் நடக்கும் சங்கரலிங்க சுவாமி கோயில் மற்றும் அகஸ்தீஸ்வரர் சுவாமி கோயில் தெப்ப உற்சவங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.