உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மத்துப்பட்டி கோயிலுக்கு புதிய அர்ச்சகர்கள்

தர்மத்துப்பட்டி கோயிலுக்கு புதிய அர்ச்சகர்கள்

கன்னிவாடி: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில், தர்மத்துப்பட்டி கோயில்களில் 2 அர்ச்சகர்களை அறநிலைத்துறை நியமித்துள்ளது.

தர்மத்துபட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில், அதன் உப கோயில்கள் இந்து அறநிலையத்துறை வசம் உள்ளன. அர்ச்சகர் பணியிடம் காலியாக இருந்த நிலையில், இதே ஊரைச் சேர்ந்த வேளாளர், மூப்பனார் சமூகத்தினர் 3 கால பூஜை, வழிபாட்டு முறைகளை மேற்கொண்டனர். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்தில், 2 அர்ச்சகர்களை அறநிலைத்துறை இக்கோயிலுக்கு நியமித்துள்ளது. காளியம்மன், பகவதியம்மன் கோயிலுக்கு விக்ரம் என்பவரையும், சுப்பிரமணியர், விநாயகர் கோயில்களுக்கு கலையரசன் என்பவரையும் நியமித்துள்ளது. இதே மாவட்டத்தை சேர்ந்த இருவரும், பழநி பாடசாலையில் 2007-08 ஆண்டில் ஒரு வருட இளநிலை அர்ச்சகர் பயிற்சி பெற்றுள்ளனர். நேற்று முன்தினம் பொறுப்பேற்று, வழக்கமான நேரத்தில் கோயில் திறப்பு, மூன்று கால (காலை 6, பகல் 12, மாலை 6 மணி) பூஜை நடத்தி வருகின்றனர். முன்னதாக பூஜை நடத்தி வந்த உள்ளூர் பிரமுகர்கள், அதிருப்தியால் கோயிலுக்கு வருவதை தவிர்த்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !