விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகரை வணங்கிய வளர்ப்பு யானைகள்
ADDED :1525 days ago
கூடலூர்: முதுமலையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் விநாயகருக்கு பூஜை செய்து வணங்கியது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பகாடு யானைகள் முகாமில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு அங்குள்ள விநாயகர் கோவிலில் பழங்குடியினர் முதலில் தங்கள் பாரம்பரிய முறைப்படி சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து வளர்ப்பு யானைகள் மசினி, கிருஷ்ணா ஆகியவை மணி அடித்து கோவிலை சுற்றி வந்து பூஜை செய்ததுடன், விநாயகரை வணங்கியது. தொடர்ந்து வளர்ப்பு யானைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் உணவுடன் பழங்கள், பொங்கல் வழங்கப்பட்டது.விநாயகர் கோவிலில் வளர்ப்பு யானைகள் நடத்திய பூஜை, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.