சதுரகிரி மலையில் காட்டுத் தீ: அவசரமாக அடிவாரம் இறங்கிய பக்தர்கள்!
வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் நேற்று முன்தினம் இரவு பற்றி எரிந்த காட்டு தீயால்,அங்கிருந்த பக்தர்கள் அவசரமாக அடிவாரம் இறங்கினர். கடும் வெயில் காரணமாக ,சதுரகிரி மலையில் புற்கள் அனைத்தும் காய்ந்த நிலையில் உள்ளன. மலைக்கு பின்பகுதியில் நேற்று முன்தினம் பற்றிய காட்டு தீ ,காற்றின் வேகத்தால் 2 கி.மீ., சுற்றளவிற்கு எரிந்தது. இரவு முழுவதும் எரிந்தது. மலைக்கு சென்ற பக்தர்களும் தீ பரவுவதற்குள் அவசரமாக அடிவாரம் இறங்கினர். இரவு முழுவதும் பரவிய தீ, காற்றின் வேகம் குறைந்ததும், காலையில் சிறிது சிறிதாக அணைந்தது. இச்சம்பவம் இயற்கையாக பற்றியதா , சமூக விரோதிகள் செயலா என வனத்துறையினர் விசாரிக்கின்றனர். இப்பகுதியில் அடிக்கடி தீ பரவுவது விவசாயிகளையும், பக்தர்களையும் வருத்தமடைய செய்துள்ளது. மலைக்கு அதிகளவில் பக்தர்கள் செல்வதால் ,கூடுதல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, வனத்துறையினர் முன் வர வேண்டும்.