உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலையில் மஹாதீபம் ஏற்றம்: 40 கி.மீ வரை பக்தர்கள் தரிசனம்

அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலையில் மஹாதீபம் ஏற்றம்: 40 கி.மீ வரை பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தர்களின் அரோகரா கோஷத்துடன், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. 40 கி.மீ., துாரம் வரை பக்தர்கள் மஹா தீப தரிசனத்தை வழிபட்டனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 10ல், தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இன்று அதிகாலை, 2:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. சுவாமி கருவறை எதிரில் சுரேந்தர் குருக்கள், ரமேஷ் குருக்கள் உள்ளிட்ட,   10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, சிறப்பு யாக பூஜை நடந்தது. பின்னர், ‘ஏகன், அனேகன்’ என்ற தத்துவத்தை கூறி, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் சுவாமிக்கு ஏற்றப்பட்ட கற்பூர தீபத்திலிருந்து, ஒரு மடக்கில் நெய் தீப விளக்கு ஏற்றப்பட்டு அதை கொண்டு, ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு காலை, 4:00 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் பரணி தீபத்தை, சுரேந்தர் குருக்கள் கையில் ஏந்தியவாறு கோவில் வளாகத்தில் எடுத்து சென்று,  விநாயகர் சன்னிதி முதல், பைரவர் சன்னிதி வரை உள்ளிட்ட  அனைத்து சன்னிதிகளிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

காலை, 11:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் சுப்ரமணியர் தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு, தனித்தனி தங்க விமானத்தில் மாலை, 5:00 மணிக்கு மூன்றாம் பிரகாரத்தில் தீப தரிசன மண்டபத்தில் தீபத்தை காணும் வகையில், மலையை நோக்கியவாறு அமர்ந்தனர். பின்னர்,  பார்வதி அம்மனுக்கு சிவபெருமான் இடபாகம் அளித்ததை நினைவு கூறும் வகையில், அர்த்தநாரீஸ்வரராய், கோவிலினுள் இருந்து மலையை நோக்கி பார்த்தவாறு மாலை, 5:59 மணிக்கு வெளிவர பரணி தீப விளக்கிலிருந்து, கோவில் கொடி மர அகண்ட தீபத்தில், தீபம் ஏற்றப்பட்டு அதிலிருந்து பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், ஐந்து தீப்பந்த ஜோதி ஏற்றப்பட்டு, 2,668 அடி உயர மலை உச்சியில்  தெரியும்படி காட்டப்பட்டது.  அதே நேரத்தில், மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது.   அப்போது பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என, பக்தி பரவச கோஷமிட்டு வழிபட்டனர்.  தொடர்ந்து,  பஞ்ச மூர்த்திகள், ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்தனர். மஹா தீபத்தை,  40 கி.மீ., துாரம் வரை பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !