சூலப்பிடாரி அம்மன் கோவிலில் 64 அடி உயர தேர்; தோளில் சுமந்து சென்ற பக்தர்கள்
கண்டாச்சிபுரம்; விக்கிரவாண்டி தாலுகா கடையம் சூலப்பிடாரி அம்மன் கோவிலில் பக்தர்கள் தோளில் தூக்கும் 64 அடி உயர தேர் திருவிழா நடந்தது. விக்கிரவாண்டி தாலுகா கடையம் ஊராட்சியில் அமைந்துள்ள சூலப்பிடாரி அம்மன் கோவில் தேர் திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். கடந்த 4 ஆம் தேதி தொடங்கிய திருவிழாவில் இன்று காலை 8;30 மணிக்கு கடையம் காப்பு காட்டு பகுதியில் உள்ள ஆத்திலியம்மன் கோயிலில் அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து கடையம் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து அக்னி சட்டி ஊர்வலம், ஏழு சொம்பு கரகம்,பூங்கரகம் வீதி உலா நடந்தது. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணியளவில் 300 பக்தர்கள் 64 அடி உயர உயரம் உள்ள தேரை பிடாரி அம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்த்திருவிழாவில் கடையம்,நல்லாபாளையம், புது கருவாட்சி, பழைய கருவாட்சி பனமலை பேட்டை,அனந்தபுரம், கண்டாச்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை சூலப்பிடாரி அம்மன் கோவில் நிர்வாகிகளும்,கடையம் கிராம பொதுமக்களும் செய்தனர்.