காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி சிறப்பு பூஜை
ADDED :1405 days ago
மேட்டுப்பாளையம்: கார்த்திகை மாத கிருஷ்ண பட்ச ஏகாதசியை முன்னிட்டு, காரமடை அரங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. கோவை மாவட்டத்தில், வைணவ ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இங்கு கார்த்திகை மாதம் கார்த்திகை கிருஷ்ண பக்ஷச ஏகாதசி வைபவம் நடந்தது. அதிகாலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், காலசந்தி பூஜை முடிந்து, விஷ்வக்சேனர் பூஜை, நவ கலசங்களில் ஆவாஹனம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு, திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து உச்சிக்கால பூஜை சாற்று முறை ஆகியவை நடந்தன. பின்பு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாதப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார், அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.