உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலில் அறங்காவலர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை

கோவிலில் அறங்காவலர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை

சென்னை, :தமிழகத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோவில்களுக்கு, விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் விஜய வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக, பாபுராயன்பேட்டையில் உள்ள, 250 ஏக்கர் நிலத்தை, ஏலம் வாயிலாக குத்தகைக்கு விட, நவம்பர் 24ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து, வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.என். பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறங்காவலர்கள் இல்லாத நிலையில், கோவில் சொத்துக்களை ஏலம் விடக் கூடாது என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. தமிழக அரசு தரப்பில், தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோவில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர், என தெரிவித்தார்.ஏல நடவடிக்கைகளை தொடர அனுமதி அளிக்கப்படுகிறது; ஏலத்தை இறுதி செய்யக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை, டிசம்பர் 15ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !