கடலாடும் விழா
ADDED :1671 days ago
மாசி மாத பவுர்ணமியுடன், மகம் நட்சத்திரம் இணையும் நாள் மாசிமகம். ஆத்ம காரகரான சூரியனும், மனதிற்கு அதிபதியாக திகழும் சந்திரனும் ஒருவரை ஒருவர் ஏழாம் பார்வையாக இந்நாளில் பார்த்துக் கொள்வர். இதனடிப்படையில் உடல், மனம், ஆத்ம பலத்தை பெறுவதற்காக நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடுவர். முன்வினைப் பாவம் நீங்கி புண்ணியம் சேரும் நாள் என்பதால் கோயில்களில் ‘கடலாடும் விழா’ நடத்தப்படும். இந்நாளில் செய்யும் நற்செயல்கள் பலமடங்கு பலனளிக்கும். 12 ஆண்டுக்கு ஒருமுறை குருபகவான் சிம்மராசிக்கு வரும் போது, கும்பகோணத்தில் ‘மகாமகம்’ என்னும் விழா இந்த நாளில் நடக்கும். அன்று கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவிரி போன்ற புனித நதிகள் எல்லாம் தங்களைப் புனிதப்படுத்திக் கொள்ள இங்கு வருவதாக ஐதீகம்.