சமயபுரத்திற்கு ஒரே குழுவாக 4000 பக்தர்கள் பாதயாத்திரை
வடமதுரை: அய்யலூரில் இருந்து ஒரே குழுவாக 4000 பக்தர்கள் சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
அய்யலுார் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்கின்றனர். தற்போது 33ம் ஆண்டாக அய்யலுார் பகுதியை சேர்ந்த 4000 பேர் கடந்த மாதம் முதல் காப்பு கட்டி விரதமிருக்க துவங்கினர். இவர்கள் நேற்று மாலை அய்யலூர் களர்பட்டி ஆதிபராசக்தி கோயிலில் குருசாமி பிச்சை தலைமையில் சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரை இழுத்தபடி சமயபுரம் புறப்பட்டனர். பக்தர்களுக்கு உதவியாக சுமார் 1000 பேர் என ஒரே குழுவாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சமயபுரத்திற்கு செல்கின்றனர். வழக்கமாக வியாழன்கிழமை புறப்பட்டு ஞாயிறுயன்று தரிசனம் செய்து திரும்புவர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு வரும் பிப்.19 சனிக்கிழமை இருப்பதால் இந்தாண்டு 3 நாட்கள் முன்கூட்டியே நேற்று புறப்பட்டனர். இவர்கள் பிப்.17ல் சமயபுரத்தில் தரிசனம் முடித்து ஊர் திரும்புவர்.