திருச்செந்துார் கோயிலில் மாசித் திருவிழா தெப்ப உற்சவம்
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில், மாசி 11ம் திருவிழாவான நேற்று முன்தினம் தெப்ப உற்சவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மின்விளக்குகளாலான சப்பரத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாளுடன் உலா வந்தார்.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித்திருவிழா, கடந்த 7ம் தி துவங்கி 12 நாட்கள் நடந்தது . திருவிழா காலங்களில் தினசரி காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்பாள் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். 11ம் திருவிழாவான நேற்று முன்தினம் மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி சப்பரத்தில், சன்னதி தெரு உள்ள யாதவர் மண்டபத்திற்கு எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி , அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக நெல்லை நகரத்தார் தெப்பக்குளம் மண்டபம் சேர்ந்தனர். அங்கு இரவு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் வண்ண மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு தெப்பத்தில் மிதந்து கொண்டு இருந்த தேரில் சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்பாள் எழுந்தருளி தெப்பத்தில், 11 முறை சுற்றி வலம் வந்து தெப்ப உற்சவம் நடந்தது. 12ம் திருவிழாவான நேற்று மாலையில் சுவாமி, அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் 8 வீதிகளிலும் உலா வந்தனர். இரவு சுவாமி, அம்பாள் னித்தனி மலர் கேடய சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர்(பொறுப்பு) குமரதுரை மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.