உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் மார்ச் 21ல் ராகுபெயர்ச்சி விழா

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் மார்ச் 21ல் ராகுபெயர்ச்சி விழா

தஞ்சாவூர்: திருநாகேஸ்வரத்தில் ராகுஸ்தலம் எனப்போற்றப்படும் நாகநாதசுவாமிகோவிலில், வரும் மார்ச் 21ம் தேதி ராகு பெயர்ச்சி விழா நடக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரத்தில், நவக்கிரகங்களுள் முதன்மையானவராக திகழும் ராகுபகவான் நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாகஅருள்பாலிக்கிறார். ராகுபகவான் ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து, மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகர்வதை ராகுப்  பெயர்ச்சி விழாவாக நடைபெறுகிறது. அதன்படி, வரும் மார்ச் 21ம் தேதி பிற்பகல் 3:13 மணிக்கு  ராகுபகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியடைகிறார்.

இதையொட்டி வரும் 19ம் தேதி கணபதி பூஜை, யாகசாலை பூஜையுடன் விழா துவங்கிறது. தொடர்ந்து 20ம் தேதி இரண்டு கால யாகசாலை பூஜையும், 21ம் தேதி காலை 10.30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், பிற்பகல் 2:30 மணிக்கு கடம் புறப்பாடு, மகா அபிஷேகம், சிறப்பு பாலபிஷேகமும், 3:13 மணிக்கு ராகு பகவான் பெயர்ச்சி அடைந்ததும் மகா தீபாரதனையும் நடைபெறுகிறது. அன்று மாலை ராகு பகவான் வெள்ளி சேஷ வாகனத்தில் வீதியுலா புறப்பாடும் நடைபெறுகிறது

லட்சார்ச்சனை : ராகு பெயர்ச்சியை முன்னிட்டு நாளை 16ம் தேதி முதல் 18ம் தேதி வரையும், பின்னர் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரையும் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ராகு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்யலாம். 19ம் தேதி முதல் மாலை நேரத்தில் தேவார இன்னிசை, நாதஸ்வரம், பரதநாட்டியும், நாத சங்கமம் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், ஆன்மிக சொற்பொழிவுகளும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !