குன்றத்தில் தேர் இழுக்க பாரம்பரிய முறைப்படி அழைப்பு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் மார்ச் 22ல் நடக்கிறது. தேர் வடம் பிடித்து இழுக்க பாரம்பரிய முறைப்படி கிராமத்தினரை அழைக்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது.
பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் மார்ச் 21 மதியம் 12:45 முதல் 01:15மணிக்குள் நடக்கிறது. மறுநாள் சுவாமி தெய்வானை தேரில் எழுந்தருள திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள 43 கிராமத்தினர், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மனையைச் சுற்றி பெரிய வைரத்தேர் வலம் வரும். பாரம்பரிய அழைப்பு: தேர் இழுக்க முக்கியஸ்தர்கள், கிராமத்தினரை அழைக்கும் நிகழ்ச்சி கோயில் முதல் ஸ்தானிக சிவாச்சாரியார் சுவாமிநாதன் தலைமையில் நேற்று துவங்கியது. வீடு வீடாகச் சென்று வெற்றிலை, பாக்கு, திருவிழா பத்திரிக்கை, விபூதி, சந்தனம் கொடுத்து அழைக்கின்றனர். ஆண்டாண்டு காலமாக பாரம்பரிய முறைப்படி இந்த அழைப்பு நடைபெற்று வருகிறது.