அருணாசலேஸ்வரர் கோவில் தாமரை குளத்தில் பாலிகை விடும் நிகழ்வு
ADDED :1380 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், அருணாசலேஸ்வரர் தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்வை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் திருக்கல்யாண உற்சவம் கடந்த, 18ல் நடந்தது. தொடர்ந்து கோவில் அலங்கார மண்டபத்தில், ஊஞ்சல் ஊற்சவம் நடந்தது. விழாவின் நிறைவாக நேற்று காலை, 9:00 மணிக்கு, கோவில் வளாகத்திலிருந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் புறப்பட்டு, தாமரைக்குளக்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் பாலிகை விடும் நிகழ்வு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.