உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மாவுக்கு கோவில் கட்டிய மகன்கள்: அபிஷேகம் செய்து வழிபாடு

அம்மாவுக்கு கோவில் கட்டிய மகன்கள்: அபிஷேகம் செய்து வழிபாடு

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, இறந்த அம்மாவுக்கு மகன்கள் கோவில் கட்டி கும்பிட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே நாவல்பட்டி காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி, 82. இவரது மனைவி அலமேலு, 72; கடந்த, 2019ம் ஆண்டு மாரடைப்பால் இறந்துவிட்டார். இவர்களுக்கு, முருகேசன்,62, பச்சமுத்து,58, என்ற மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். முருகேசன் வக்கீலாக உள்ளார். பச்சமுத்து விவசாயம் பார்த்து வருகிறார். மகள்கள் மூன்று பேருக்கும் திருமணமாகிவிட்டது. அம்மா மீது மிகுந்த பாசம் கொண்ட மகன்கள் இருவரும், அவர் இறந்ததில் இருந்து மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். அம்மாவின் பிரிவு தாங்க முடியாமல், கோவில், கோவிலாக சென்று வழிபட்டு வந்தனர். ஆனாலும் மனம் ஆறுதல் அடையவில்லை. இந்நிலையில் தங்களது விவசாய நிலத்திலேயே அம்மாவுக்கு கோவில் கட்ட முடிவு செய்தனர். விவசாய நிலத்திலேயே கருங்கற்களால் கோவில் கட்டி, கருவறையில் இரண்டே முக்கால் அடி உயரத்தில் அலமேலுவுக்கு சிலை வைத்து விட்டனர். தற்போது, தினந்தோறும் பால் அபிஷேகம், ஆராதனை செய்து வழிபட்டு வருகின்றனர். இதுகுறித்து முருகேசன், பச்சமுத்து ஆகியோர் கூறுகையில், ‘அம்மாவை மறக்க முடியவில்லை. அதனால் அம்மாவை தினமும் பார்க்க, அவருக்கு கோவில் கட்டி வழிபட்டு வருகிறோம்’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !