திருப்புல்லாணியில் ராமானுஜரின் 1005 வது ஜெயந்தி விழா
ADDED :1400 days ago
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் ராமானுஜரின் 1005 ஆம் ஆண்டு ஜெயந்தி உற்ஸவ விழா நடந்தது.
சித்திரை மாத சுக்ல பட்சம், திருவாதிரை நட்சத்திரத்தன்று அவதரித்த ராமானுஜர் (உடையவர்) சன்னதியில் ஜெயந்தி விழா நடந்தது. கடந்த மே 4 அன்று துவங்கிய பூஜை நேற்று காலையில் நிறைவடைந்தது. மூலவர் மற்றும் உற்ஸவ மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் நடந்தது. நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்கள் பாடப்பட்டது. ஆதி ஜெகநாத பெருமாள், பத்மாஸனித்தாயார், பட்டாபிஷேக ராமர், தர்ப்பசயன ராமர் உள்ளிட்ட சன்னிதிகளில் மங்களாசாசனம் நடந்தது. உற்ஸவ மூர்த்தியின் உள்பிரகார வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை கோயில் பேஸ்கார் கண்ணன், சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.