கரிசல்பட்டியில் 1200 ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம்
எஸ்.புதூர்: எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் மே 13ல் நடக்கிறது. சிவகங்கை தேவஸ்தானத்தின் நிர்வாகத்திற்குட்பட்ட இக்கோயில் 1200 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. லிங்க வடிவில் கைலாசநாதரும், கமலாம்பிகா அம்பாளும் தனித்தனி சந்நிதிகளில் அருள் பாலிக்கின்றனர். விநாயகர் சுப்பிரமணியர் சன்னதிகளும் உண்டு. வன்னி மரம் தலவிருட்சமாக உள்ளது. சுற்றுவட்டார மக்கள் தங்கள் இல்லத் திருமணங்களை இக்கோயிலில் நடத்துகின்றனர். கடந்த 2006 ல் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் தற்போது ரூ.25 லட்சம் செலவில் உபயதாரர்கள் நிதி உதவியுடன் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதற்காக யாகசாலை அமைக்கப்பட்டு இன்று (மே 11) காலை 9:00 மணிக்கு 4 கால பூஜை தொடங்குகிறது. மே 13 ம் தேதி காலை 6:30-7:45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை உபயதாரர்கள், திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.