மாரியம்மன் கோவில் திருவிழா : பூகுண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :1360 days ago
ஊட்டி: பத்தலூர் அருகே சேரங்கோடு டான்டீ மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 13 ம்தேதி காலை கணபதி ஹேமம், காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் துவங்கியது.கோட்ட மேலாளர் ராமன் தலைமையிலான அதிகாரிகள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.தொடர்ந்து இரவு அம்மன் குடியழைத்தல் நடந்தது. 14 ம்தேதி காலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதுடன், ஏலமன்னா நீர்த்தேக்கத்திலிருந்து பறவை காவடி, புஷ்ப காவடி, அக்னி காவடி, பால்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பூ குண்டம் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவு செய்தவுடன், அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், தேர் ஊர்வலமும் நடந்தது.நேற்று காலை சிறப்பு பூஜைகள், மாவிளக்கு பூஜை மற்றும் கரகம் குடிவிடுதலுடன் விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.