உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் வைகாசி பவுர்ணமி வழிபாடு; பல்லாயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம்

சதுரகிரியில் வைகாசி பவுர்ணமி வழிபாடு; பல்லாயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம்

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பல்லாயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஒவ்வொரு தமிழ் மாதமும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் நிலையில், நேற்று வார விடுமுறை நாள் என்பதாலும், வைகாசி மாத பிறப்பு நாள் என்பதாலும் அதிகாலை முதல் திரளான பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரம் மற்றும் தோப்புகளில் வந்து தங்கியிருந்தனர். காலை 6:30 மணிக்கு வனத்துறை கதவு திறக்கப்பட்டு பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை நேரத்தில் லேசான சாரல் பெய்த நிலையில் நீர்வரத்து ஓடைகளில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மதியம் ஒரு மணிவரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து திரும்பியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பவுர்ணமி வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது. வத்திராயிருப்பு மற்றும் சாப்டூர் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !