உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாவடுதுறை ஆதீனம் குரு மகா சன்னிதானத்தின் ஜென்ம நட்சத்திர திருநாள் விழா

திருவாவடுதுறை ஆதீனம் குரு மகா சன்னிதானத்தின் ஜென்ம நட்சத்திர திருநாள் விழா

மயிலாடுதுறை : திருவாவடுதுறை ஆதினத்தில் 24வது குரு மகா சன்னிதானத்தின் ஜென்ம நட்சத்திரத் திருநாளை முன்னிட்டு சிவனடியார்களுக்கு வஸ்திரதானமும், சேவையாளர்களுக்கு பொற்கிழியையும் வழங்கி குருமகா சன்னிதானம் அருளாசி வழங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறையில் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மை வாய்ந்த திருவாவடுதுறை சைவ ஆதீன திருமடம் உள்ளது. இந்த ஆதீனத்தின் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தற்போது அருளாட்சி புரிந்து வருகிறார். இவரது ஜென்ம நட்சத்திர விழா நேற்று ஆதீன திருமடத்தில்  கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை ஞானமா நடராஜப்பெருமான், ஆதீன குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சிவப்பிரகாச விநாயகர் சன்னதியில் கணபதி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம் செய்யப்பட்டு குருமகாசன்னிதானம் முன்னிலையில் பூர்ணாகுதி தீபாராதனை நடத்தப்பட்டது ஹோமத்தை 25 சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர். தொடர்ந்து குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கோமதீஸ்வரர் கோவில் கோபூஜை கஜபூஜை செய்ததுடன் சுவாமி அம்பாளை தரிசனம் செய்தார்.

அதனையடுத்து ஆதீனத் திருமடம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரத்த தான முகாம், பல் சிகிச்சை மருத்துவ முகாமினை தொடங்கி வைத்த குருமகாசன்னிதானம் நவீனமயமாக்கப்பட்ட நமச்சிவாய மூர்த்திகள் அச்சகத்தை திறந்து வைத்தார்.  விழாவில்  பல்வேறு சமுதாய  சேவையில்  சிறப்பாக பணியாற்றிய 10 பேருக்கு "மனிதநேய மாமணி" என்ற பட்டத்தை வழங்கி தலா ரூ 10ஆயிரம் பொற்கிழி வழங்கி அருளாசி வழங்கினார். மேலும், சிவனடியார்கள் 100 பேருக்கு குருமகா சன்னிதானம் வஸ்திரங்களை வழங்கி அருள் ஆசி கூறினார். இதனை தொடர்ந்து மதியம் மாகேஸ்வர பூஜை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருவருளை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !