படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ரூ.34.57 லட்சம் உண்டியல் காணிக்கை
ADDED :1298 days ago
கண்ணமங்கலம்: படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோவிலில், 34.57 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கண்ணமங்கலம் அடுத்த படவேடு கிராமத்தில், ஹந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட ரேணுகாம்பாள் அம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து, உண்டியல் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இவ்வாறு செலுத்தப்படும் உண்டியல் காணிக்கை, இரண்டு மதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த மே மாதம் முதல், நேற்று முன்தினம் வரை உண்டியலில் கிடைத்த காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில், 34 லட்சத்து, 57 ஆயிரத்து, 128 ரூபாய், 440 கிராம் தங்கம், 450 கிராம் வெள்ளி, ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.