ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :1224 days ago
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி பஞ்சமூர்த்தி சுவாமி திருவீதியுலா நேற்று நடந்தது. ரிஷிவந்தியத்தில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த , முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் தேர்திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு அபிேஷகமும், பூஜைகளும், இரவு பஞ்சமூர்த்தி சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. ஆறாம் நாளான நேற்று, அலங்கரிக்கப்பட்ட பஞ்சமூர்த்தி சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து யானை வாகனத்தில், பஞ்சமூர்த்தி சுவாமி வீதியுலா நடந்தது. குருக்கள் நாகராஜ், சோமு ஆகியோர் பூஜைகளை செய்தனர். இன்று 9ம் தேதி சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 11ம் தேதி மாலை 3:30 மணியளவில் தேர் திருவிழா நடக்கிறது.