மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா துவக்கம்
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.முக்கிய விழாவான திருக்கல்யாணம் வருகிற 8ம் தேதியும்,12ந்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் வருடந்தோறும் ஆடித்தபசு விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டிற்கான பிரம்மோற்ஸவ திருவிழாவிற்காக நேற்று அதிகாலை உற்சவர் வீர அழகருக்கு 11 வகையான பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.பின்னர் வீர அழகர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கொடிமரத்துக்கு முன்பாக சர்வ அலங்காரங்களுடன் எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து அர்ச்சகர் கோபி மாதவன் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடத்தப்பட்ட பின்பு காலை 5:40 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.. விழா நாட்களின் போது சுவாமிகள் தினந்தோறும் இரவு பறங்கி நாற்காலி,சிம்மம், பல்லக்கு ஆகியவற்றில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 8ம் தேதியும்,12ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் சீனிவாசன், பரம்பரை ஸ்தானீகம் கோபிமாதவன் ஆகியோர் செய்து வருகின்றனர்.