பரமக்குடி பெருமாள் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, உறியடி உற்சவம் உற்சாகத்துடன் நடந்தது.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று மாலை பெருமாள் கிருஷ்ண அவதாரத்தில் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 8:30 மணிக்கு கோயில் முன்பு உள்ள உறி அடிக்கும் விழா நடந்தது. தொடர்ந்து காளிதாஸ் பள்ளிக்கூட தெருவில் வெண்ணை, தயிர், பால் மற்றும் தேங்காயில் கட்டப்பட்ட உறிகளை அடிக்கும் நிகழ்வு நடந்தது. குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து இருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ரத வீதிகளில் வலம் வந்த பெருமாள் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் அமைக்கப்பட்ட மண்டகப்படிகளில் சேவை சாதித்தார். இரவு 10:00 மணிக்கு சிறப்பு தீப ஆராதனைகள் நடந்து, பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
*இதேபோல் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து பல்வேறு தெருக்களில் அமைக்கப்பட்ட உறிகளை அடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க உற்சாகத்துடன் பங்கேற்றனர்.