மேல்மலையனூரில் ஊஞ்சல் உற்சவம் : கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த ஆவணி அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் வழக்கம் போல் வந்திருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரமம் செய்தனர். இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளியதும், கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூரதீபமேற்றி வழிபட்டனர். பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் மற்றும் அறங்காவலர்கள் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். நேற்று மாலை முதல் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பரவலாக கன மழை பொழிந்த நிலையிலும் வழக்கம் போல் பக்தர்கள் குவிந்திருந்தனர்.