மேல்மலையனூரில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன் தினம் நடந்த புரட்டாசி மாத மாகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராமான பக்தர்கள் குவிந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு புரட்டாசி மாத மாகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அன்று காலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம், விசேஷ அர்ச்சனை நடந்தது. இரவு 11.20 மணிக்கு உற்சவர் அங்காளம்மன் வைஷ்ணவி தேவி அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூரதீபமேற்றி வழிபட்டனர். பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி, தாலாட்டு பாடல்களை பாடினர். இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் மற்றும் அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். நேற்று மேல்மலையனூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் மாலை 5.30 மணிக்கு துவங்கி இரவு 8.30 மணி வரை மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையையும் பொருட் படுத்தாமல் வழக்கத்தை விட கூடுதலாக பக்தர்கள் குவிந்திருந்தனர்.