உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேடசந்தூர் அருகே சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து விடிய விடிய நடந்த வினோத திருவிழா

வேடசந்தூர் அருகே சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து விடிய விடிய நடந்த வினோத திருவிழா

வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ஒன்று கூடி நடைபெறும், நிலா பெண் வழிபாடு எனும் வினோத திருவிழா விடிய விடிய நடந்தது. திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.


வேடசந்தூர் ஒன்றியம், குட்டம் ஊராட்சி தேவிநாயக்கன்பட்டியில் 300 வீடுகள் உள்ளன. விவசாயம், கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயம் செழிக்கவும் மக்கள் நலமுடன் வாழவும் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தினத்தன்று ஒரு சிறுமையை நிலா பெண்ணாக தேர்வு செய்து ஊர் மக்கள் ஒன்று கூடி வினோத வழிபாடு நடத்தப்படுகிறது. தைப்பூசத்திற்கு ஒரு வாரம் முன்பே ஊர் மக்கள் ஒன்று கூடி நிலா பெண்ணை ஒருமனதாக தேர்வு செய்கின்றனர். தேர்வு செய்யப்படும் வயதுக்கு வராத அந்த சிறுமியை நிலாவுக்கு மனைவியாக பாவித்து கொண்டாடுகின்றனர். தேர்வு செய்யப்பட்ட அந்த நிலா பெண்ணுக்கு ஒரு வார காலத்திற்கு அப்பகுதியில் உள்ள சிறுமிகள் மற்றும் பெண்கள் ஒன்று கூடி அங்குள்ள கோயிலில் வைத்து பால், பழம், பேரிச்சை உள்ளிட்ட சத்தான உணவுகளை கொடுத்து மகிழ்கின்றனர். நடப்பு 2026 ல் கோட்டூரைச் சேர்ந்த விவசாயி மூர்த்தி -மகாலட்சுமி தம்பதியினரின் மகள் ஜியா ஸ்ரீ 10, தேர்வு செய்யப்பட்டார். அங்குள்ள அரசு துவக்கப் பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வருகிறார்.


நேற்று இரவு தைப்பூசத்தை முன்னிட்டு இரவு 9:00 மணி அளவில், ஊரில் உள்ள மாசடச்சியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஊர் மக்கள் புடைசூழ நிலா பெண்ணை ஊர அருகே உள்ள சரளைமேடு பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கூடியிருந்த பெண்கள் ஆவாரம் பூவை தலை மற்றும் கை கால்களில் சூடி, ஆவாரம் பூ நிரம்பிய கூடையை தலையில் வைத்து, மீண்டும் ஊரில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பு அழைத்து வந்தனர்.‌ அங்கு நிலா பெண்ணை அமர வைத்து பெண்கள் கூடி நின்று வட்டமிட்டு பாட்டு பாடி கும்மி அடித்து மகிழ்ந்தனர். அதன் பிறகு பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து நிலா பெண்ணுக்கு சீர் செய்தனர்.‌ அதிகாலையில் ஊர் எல்லையில் உள்ள கிணற்றுக்கு அழைத்துச் சென்று, கூடையில் வைத்திருந்த ஆவாரம் பூக்களை கிணற்றில் உள்ள தண்ணீரில் இட்டு வணங்கினர் அதேபோல் கலையத்தில் விளக்கு ஏற்றி மிதக்க விட்டு வழிபாடு நடத்தினர். அதன் பிறகு ஊர் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். இன்று இரவு ஊர் மக்கள் சார்பில் மைதானத்தில் அன்னதானம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நிலா பெண்ணே நிகழ்ச்சி, இப்பகுதியில் ஊரின் ஒற்றுமைக்காக, நீண்ட காலமாக நடத்தப்படும் ஓர் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !