உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழகத்தில் 25 சதவீதமாவது ஹிந்து ஓட்டு வங்கி என்பதே வேதாந்தம்ஜி கனவு: ஆர்ஆர்.கோபால்ஜி

தமிழகத்தில் 25 சதவீதமாவது ஹிந்து ஓட்டு வங்கி என்பதே வேதாந்தம்ஜி கனவு: ஆர்ஆர்.கோபால்ஜி

சென்னை: தமிழகத்தில் குறைந்தது 25 சதவீதம், ஹிந்து ஓட்டு வங்கியை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையும், அதை செயல்படுத்த வேண்டும் என்ற ஆர்வமும், வேதாந்தம்ஜிக்கு உள்ளது, என, தினமலர் நாளிதழின் திருச்சி, வேலுார் பதிப்புகளின் வெளியீட்டாளரும், தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநிலத் தலைவருமான ஆர்ஆர்.கோபால்ஜி தெரிவித்தார். 


விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின், முன்னாள் சர்வதேச செயல் தலைவர் வேதாந்தம்ஜியின் 75 ஆண்டு கால சமுதாயப்பணியை பாராட்டி, சென்னை சேத்துப்பட்டில், நேற்று பாராட்டு விழா நடந்தது. விழாவில், ஆர்ஆர்.கோபால்ஜி பேசியதாவது:  வேதாந்தம்ஜி தன் 75 ஆண்டுகால வாழ்க்கை பயணத்தை, ஹிந்து சமுதாயத்திற்காக அர்ப்பணித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு நுாற்றாண்டு விழா காணும் நேரத்தில், வேதாந்தம்ஜிக்கு பாராட்டு விழா நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.  அவர், கல்வி, ஆன்மிகம் என, சமுதாயத்திற்கு பல தொண்டுகள் செய்துள்ளார். விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின், 16 பள்ளிகளில், 20,000க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.  பூஜாரிகள் பேரவை என்ற அமைப்பு துவக்கப்பட்டு, கிராம கோவில் பூஜாரிகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளார். 


தெய்வத்தை, மக்கள் தொட்டு வணங்க வேண்டும் என்ற நோக்கில், கிராமம் தோறும் சக்தி மற்றும் ஞான ரதங்களை நிறுவி, அவை பல்லாயிரக்கணக்கான கிராமங்கள் சென்று, பூஜைகள் நடக்கின்றன. அதேபோல், ஆண்டுதோறும் திருப்பதி திருக்குடை நிகழ்ச்சி நடக்கிறது. அதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பிக்கின்றனர். வேதாந்தம்ஜிக்கு, 94 வயது நடந்தாலும், ஒரு இளைஞனை போல் சிந்திக்கக் கூடியவர். ஹிந்து ஒற்றுமைக்காக, தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர். தமிழகத்தில் 25 சதவீதமாவது, ஹிந்து ஓட்டு வங்கி உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையும், கவலையும் அவருக்குள் உள்ளது. அதை செயல்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.   விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தேசிய பொதுச்செயலர் பஜ்ரங்லால் பக்கராஜி பேசியதாவது:  உலகின் பெரிய ஹிந்து அமைப்பாக, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளது. உலகம் முழுதும் 76,000 இடங்களில், இந்த அமைப்பின் பணி நடந்து வருகிறது.  இதன் பெயரை கூறினால், அயோத்தி ராமர் கோவிலுக்கான போராட்டம் மட்டுமே தெரிய வருகிறது. ஆனால், அளப்பரிய பல சேவைகளை செய்து வருகிறோம். ஜாதி பேதங்கள் குறைந்து, சமுதாய நல்லிணக்கம் ஏற்பட உழைத்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார். 


 ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முன்னாள் தேசிய பொதுச் செயலர் பையாஜி ஜோஷி பேசியதாவது:  தமிழகத்தில் ஹிந்து விரோத, ராமர் விரோத, வடக்கு விரோத சூழ்நிலை மாறி, தேசிய நீரோட்டத்தில், தமிழகம் கலந்திருப்பதற்கு, முக்கிய பங்காற்றியவர் வேதாந்தம்ஜி.  ராமர் கோவிலுக்கு நிதி திரட்ட, வீடு வீடாக சென்றோம். அப்போது, 15 கோடி மக்கள், நிதி அளித்து தங்கள் ஆதரவை அளித்தனர். வேதாந்தம்ஜி, அர்த்தமுள்ள வாழ்வை வாழ்ந்து, வெற்றிக்கான நம்பிக்கையை, அனைவரிடத்திலும் விதைத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.  விழாவை, தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் கிரிஜா சேஷாத்ரி ஒருங்கிணைத்தார். அமைப்பின் தென் தமிழக பொதுச் செயலர் குமாரசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !