உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேதார்நாத்தில் தேவாரக் கல்வெட்டுகள் : தருமபுர ஆதீனம் முன்னிலையில் திறப்பு

கேதார்நாத்தில் தேவாரக் கல்வெட்டுகள் : தருமபுர ஆதீனம் முன்னிலையில் திறப்பு

மயிலாடுதுறை: கேதார்நாத் கோவிலில் தமிழ், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் ஆன தேவார பதிக கல்வெட்டுகள்  தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.
 
தேவாரப் பாடல் பெற்ற 275 சிவ தலங்கள் இந்தியாவில் அமைந்துள்ளது. அவற்றில் கேதார்நாத், உள்ளிட்ட 5 சிவ தலங்கள் வடநாட்டில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் இமயமலையில் 20 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள கேதார்நாத் கோவிலில்  இரு தினங்களுக்கு முன்பு 300 சிவாச்சாரியார்களைக் கொண்டு ருத்ர ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து கேதார்நாத் கோவில் குறித்து திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பதிகங்கள் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கல்வெட்டுகளாக பொறிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தருமபுர ஆதீன 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மற்றும் கட்டளை  தம்பிரான் சுவாமிகள் பங்கேற்றனர். சென்னையில் இருந்து கேதார்நாத் சென்று மீண்டும் 20 மணி நேரத்தில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு  இன்று மடத்தின் பூஜா மூர்த்தி சொக்கநாத பெருமானுடன் தருமபுர ஆதீன  குரு மகா சன்னிதானம்  திருமடத்திற்கு திரும்பினார். தொடர்ந்து பூஜா மூர்த்தியை மடத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மடாதிபதியின் ஞான கொலு காட்சியும் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தருமையாதீன குரு மகா சன்னிதானம், இந்த தேவாரப் பதிக கல்வெட்டுகளை கேதார்நாத் கோவில் பதிக்கும் நிகழ்ச்சி மூலம் நமது தமிழ் தேவாரப் பாடல்களின் பெருமையை வட மாநில பக்தர்கள் தெரிந்து கொள்வார்கள் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !