ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி புறப்பட்டது
சபரிமலை:சபரிமலையில் மண்டலபூஜைக்கு ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கும் தங்க அங்கி பவனி நேற்று ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டது.
பூஜைக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டும் உள்ள நிலையில் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. சபரிமலையில் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் நடைபெறும் பூஜைகளின் நிறைவாக மண்டல பூஜை டிச. 27 ல் நடக்கிறது. இந்த நாளில் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்க மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் 453 பவுன் ( 3.624 கிலோ) எடையில் காணிக்கையாக வழங்கிய தங்கஅங்கி பத்தணந்திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. பவனி புறப்பட்டது நேற்று அதிகாலை 5:00 மணி முதல் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் யானை கொட்டிலில் பக்தர்களுக்கு தரிசனத்திற்காக வைக்கப்பட்டிருந்தது. நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். காலை 7:00 மணிக்கு சபரிமலை உருவில் வடிவமைக்கப்பட்ட ரதத்தில் அங்கி வைக்கப்பட்டு பவனி புறப்பட்டது. நேற்றிரவு ஓமல்லுார் கோயிலிலும், இன்று இரவு கோந்நி முருங்கமங்கலம் கோயிலிலும், நாளை பெருநாடு சாஸ்தா கோயிலிலும் தங்கும் பவனி, டிச. 26 மதியம் பம்பை வந்தடையும்.பம்பை கணபதி கோயில் அருகே பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும் அங்கி மாலை 3:00 மணிக்கு பேடகத்தில் வைக்கப்பட்டு தலைசுமடாக நீலிமலை, அப்பாச்சிமேடு வழியாக கொண்டு வரப்படும்.