சனிப்பெயர்ச்சி : பரிகார ராசியும்.. எளிய பரிகாரமும்..!
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனிபகவான் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 2023 ஜன.17 (தை 3) செவ்வாயன்று மகர ராசி அவிட்ட நட்சத்திரம் 2ம் பாதத்தில் இருந்து கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார். 2025 மார்ச் 29ல் கும்ப ராசியில் தங்கியிருப்பார்.
நன்மை பெறும் ராசி: மிதுனம், கன்னி, துலாம், தனுசு
நன்மையும், தீமையும் பெறும் ராசிகள்: மேஷம். ரிஷபம்
பரிகார ராசிகள்: கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம்
எந்த ராசிக்கு என்ன சனி?
ராசி சனியின் பெயர் பலன்கள்
மேஷம் லாபச்சனி முயற்சிக்குப் பின் லாபம்
ரிஷபம் ஜீவனச்சனி தொழிலில் முன்னேற்றம்
மிதுனம் பாக்கிய சனி தந்தையுடன் கருத்து மோதல், பணப்பிரச்னை
கடகம் அஷ்டம சனி அனைத்திலும் கவனம் தேவை
சிம்மம் கண்டக சனி வாகனப் பயணத்தில் கவனம் தேவை - வாழ்க்கைத்துணையுடன் மனவருத்தம்
கன்னி ரண ருண சனி உடல்நலனில் கவனம்
துலாம் பஞ்சம சனி குழந்தைகளுடன் வீண் வாக்குவாதம்
விருச்சிகம் அர்த்தாஷ்டம சனி வீடு, மனை, வாகனத்தில் பிரச்னை
தனுசு தைரிய வீர்ய சனி தைரியம், மதிநுட்பம் வெளிப்படும்
மகரம் வாக்கு சனி பேச்சில் கவனம் தேவை
கும்பம் ஜென்ம சனி அனைத்திலும் கவனம் தேவை
மீனம் விரைய சனி வீண் விரயம் ஏற்படும்
பொது பலன்: கும்ப ராசி அவிட்ட நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்கு சனிபகவான் பெயர்ச்சியாகிறார். தன் மூன்றாம் பார்வையால் மேஷத்தையும், ஏழாம் பார்வையால் சிம்மத்தையும், பத்தாம் பார்வையால் விருச்சிகத்தையும் பார்க்கிறார். சனியின் பார்வை ராகுவின் மீது விழுகிறது. நாடுகளுக்குள் மோதல் போக்கு உருவாகும். பூமி வெப்பமயமாக இருக்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும். கல்வி வளர்ச்சியில் தொய்வு ஏற்படும். பூமி, நிலம் சம்பந்தமான பிரச்னைகள் அதிகரிக்கும். அறுவை சிகிச்சை முறைகளில் புதிய கண்டுபிடிப்பு உருவாகும். கலப்புத் திருமணங்கள் அதிகமாகும். இயற்கை சீற்றங்களால் மக்கள் அவதிப்படுவர். தற்கொலைகள் அதிகரிக்கலாம். குழந்தைகளுக்கு அதிகளவில் நோய்கள் உண்டாகலாம். செயற்கை கருத்தரிப்பு அதிகமாகும்.
சனி ஸ்லோகம்
நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்
கண் மை போல கருநிறம் கொண்டவரே! சூரியனின் மைந்தரே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவரே! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவரே! சனிபகவானே! உம்மைப் போற்றுகிறேன்.
எளிய பரிகாரங்கள்
* தினமும் விநாயகர், அனுமன் கோயில் வழிபாடு அவசியம்.
* விநாயகர் அகவல், அனுமன் சாலீசா, சுந்தரகாண்டம் படிப்பது நன்மை தரும்.
* கணபதி, பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு ஹோமம் செய்வதும், அதில் பங்கேற்பதும் சிரமங்களைப் போக்கும்.
* அமாவாசையன்று முன்னோர் தர்ப்பணம், திதி கொடுப்பது நல்லது.
* தினமும் காகத்திற்கு உணவிட்டால் நிம்மதி நிலைக்கும்.