உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழனி ஆண்டவர் கோவிலில் முளைப்பாலிகை ஊர்வலம்

பழனி ஆண்டவர் கோவிலில் முளைப்பாலிகை ஊர்வலம்

அன்னூர்: சாலையூர் பழனி ஆண்டவர் கோவில் முளைப்பாலிகை ஊர்வலத்துடன் கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. அன்னூர் அருகே சாலையூரில், 2000 ஆண்டுகள் பழமையான பழனி ஆண்டவர் கோவில் உள்ளது. இக் கோவில் சித்தர்களால் வழிபடப்பட்ட பெருமை உடையது. இங்கு பழனி ஆண்டவர் சுயம்புவாக அருள் பாலிக்கிறார்.

இங்கு பல கோடி ரூபாய் செலவில் கருங் கற்களால், கருவறை, மகா மண்டபம், சித்தர்கள் சன்னதி, பரிவார தெய்வங்கள் சன்னதி அமைக்கப்பட்டுள்ளன. கோவில் கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. காலையில் அன்னூர் வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாலிகையுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இதையடுத்து எண் திசை காவலர் வழிபாடு, நவகோள் வழிபாடு, திருவருட்சக்திகளை திருக்குடங்களில் எழுந்தருள செய்தல் ஆகியவை நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை 10:00 மணிக்கு விமான கலசங்கள் நிறுவுதலும், மாலையில் 108 மூலிகைப் பொருட்களை யாக குண்டத்தில் சமர்ப்பிப்பதும் நடக்கிறது. வரும் 31ம் தேதி காலையில் விநாயகர், சித்தர்கள் மற்றும் மூர்த்திகளுக்கும், இரவு மூலவர் பழனி ஆண்டவருக்கும் எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. பிப். 1ம் தேதி காலை 6:30 மணிக்கு விநாயகர், கதிர்காம வேல் மற்றும் சித்தர் சன்னதிகளுக்கும், 9:45 மணிக்கு விமான கலசங்கள் மற்றும் பழனி ஆண்டவருக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் மடாதிபதிகள் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !