கோவை அருகே சிவராத்திரி விழா : ஆணிக்கால் செருப்புடன் நடந்த கோவில் பூசாரி
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பூச்சியூரில் நடந்த சிவராத்திரி விழாவில் பூசாரி ஆணிக்கால் செருப்பு அணிந்து நடந்து வந்தார்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே நரசிம்மநாயக்கன்பாளையம் பூச்சியூரில் சிவராத்திரி விழாவையொட்டி மகாலட்சுமி கோவில், வீரபத்திரசாமி தொண்டம்மாள் கோவில், வேட்டைக்கார சாமி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில் அருகே உள்ள மைதானத்தில் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு நேற்று காலை ஊர்வலமாக கோவிலை நோக்கி அழைத்து வரப்பட்டன. இதில், வேட்டைக்கார சாமி கோவில் ஊர்வலத்தின் போது, கோவில் பூசாரி ஆணிக்கால் செருப்பு அணிந்து ஊர்வலமாக நடந்து வந்தார். நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல மகாலட்சுமி கோவில், வீரபத்திரசாமி தொட்டம்மாள் கோவில்கள் சார்பில் சுவாமி ஊர்வலங்கள் நடந்தன. விழாவில், மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், சின்னதடாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.