தேனி மாவட்ட கோயில்களுக்கு அறங்காவலர்களை பரிந்துரைக்க 5 பேர் கொண்ட குழு நியமனம்
கம்பம்: தேனி மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கோயில்களுக்கு அறங்காவலர்களை கண்டறிந்து பரிந்துரை செய்ய 5 பேர்கள் கொண்ட மாவட்ட குழு ஒன்றை ஹிந்து சமய அறநிலைய துறை நியமித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள 300 க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அறங்காவலர்களை கண்டறிந்து ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு பரிந்துரை செய்ய 5 பேர்கள் கொண்ட மாவட்ட குழு ஒன்றை மாநில ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் நியமித்துள்ளார். கம்பம் கேஆர்.ஜெயபாண்டியன், முருகேசன், ராசிங்காபுரத்தை சேர்ந்த செந்தில் முருகன், ஆண்டிபட்டி முத்துமீனா, தாமரைக்குளத்தை சேர்ந்த காஞ்சி வனம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் செந்தில் முருகன் தலைவராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு யாரை அறங்காவலர்களாக நியமிக்கலாம் என்று பரிந்துரை செய்யும்.