உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வசந்த விழாவில் வைகை ஆற்றில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள்

வசந்த விழாவில் வைகை ஆற்றில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள்

பரமக்குடி : பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழாவில், பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் எழுந்தருளினார்.

எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு பாத்தியான வரதராஜ பெருமாள் கோயிலின், 116 வது வசந்த உற்ஸவ விழா நேற்றுமுன்தினம் துவங்கியது. பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் அலங்காரமாகி, நள்ளிரவு 3:00 மணிக்கு பூ பல்லக்கில் எழுந்தருளினார். அப்போது பெருமாளுக்கு கருப்பண்ண சுவாமி சன்னதியில் தீபாராதனை நடந்தது. வான வேடிக்கை, கோவிந்தா கோஷம் முழங்க, நேற்று அதிகாலை 5:30 மணிக்கு வைகை ஆற்றில் கள்ளழர் கோலத்தில் இறங்கினார். மஞ்சள் பட்டினம் மண்டகப்படியில் நேற்று காலை 10:00 மணிக்கு குதிரை வாகனத்தில் அலங்காரமாகி, மஞ்சள் பட்டினம், மேலச்சத்திரம் வழியாக அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் விடையாற்றினார். மேலும் பெரிய பஜார், காந்தி சிலை வழியாக பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் முன்பு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து வைகை ஆற்றில் மாலை 6:00 மணிக்கு திருச்சப்பரத்தில் எழுந்தருளினார். பின்னர் எமனேஸ்வரம் முக்கிய வீதிகள் வழியாக அனைத்து நெசவாளர் காலனிக்கும் சென்று இரவு வண்டியூர் மண்டபடியில் சேர்க்கையாகினார். இன்று சேஷ வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு காட்சி தருகிறார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபையினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !