உலகளந்த பெருமாள் கோவிலில் தாயார் வசந்தோற்சவம்
ADDED :975 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் தாயார் வசந்தோற்சவ விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் தாயார் வசந்தோற்சவ விழா கடந்த 3ம் தேதி துவங்கியது. விழாவின் நிறைவாக நேற்று மாலை 5:00 மணிக்கு புஷ்பவல்லி தாயார் சிறப்பு அலங்காரத்தில் ஆஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி, கொலுமண்டபத்தில் ஊஞ்சல் சேவையில் எழுந்தருளினார். சந்தனம், குங்குமம், ஜவ்வாது உள்ளிட்ட திரவியங்களுடன் வாசனை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வேதப்பாராயணம், ஸ்ரீ லட்சுமி சகஸ்ரநாமம், திருவாராதனம், சாற்றுமறை நிறைவடைந்து தாயார் ஆஸ்தானம் எழுந்தருளினார். ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், தேவஸ்தான ஏஜென்ட் கோலாகலன் மற்றும் பக்தர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.