ஹரியும் ஹரனும் ஒண்ணு
சிவபெருமானும் பெருமாளும் பண்பில் வெவ்வேறானவர்கள். அதாவது பெருமாள் சக்கரவர்த்தியாக கிரீட குண்டலங்கள், பீதாம்பரம் (பட்டு நுாலால் நெய்த சால்வை) கொண்டிருக்கிறார். இவரிடம் ஐஸ்வரிய தேவதையான மஹாலட்சுமி இருக்கிறாள். ஆனால் சிவபெருமானோ சாம்பல், எருக்கம்பூ, தும்பைப்பூ, மண்டை ஓடு, யானைத்தோல், பாம்பு என ஆண்டியாக உள்ளார். அம்பாளுக்கோ ‘அபர்ணா’ என்று பெயர். இதற்கு இலை (பரணம்) கூட இல்லாதவள் என்று அர்த்தம். இலையைக் கூட உண்ணாமல் தியாகியாக தவம் செய்தவள் அம்பாள். பெருமாளிடம் உள்ளவை விலை மதிக்க முடியாதவை. சிவபெருமானிடம் உள்ளவை விலை மதிப்பு இல்லாதவை. பக்தர்கள் தங்களின் மனதைப் பொறுத்து இருவரையும் வழிபடுகின்றனர். எப்படி இருந்தாலும் ஆழ்வார்களும், நாயன்மார்களும் இவர்கள் இருவரும் ஒருவரே என்கின்றனர்.
தாழ்சடையும் நீண்முடியும்; ஒண்மழுவும் சக்கரமும்
சூழ்அரவும் பொன் நாணும் தோன்றுமால் – சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து
என்று இரண்டு இரண்டாக, அதிலும் முதலில் சிவ அம்சத்தையும், இரண்டாவதாக பெருமாளின் அம்சத்தையும் சொல்லி திருப்பதியில் இருக்கும் பெருமாளை பாடுகிறார் பேயாழ்வார்.
இடம் மால் வலந்தான் இடப்பால் துழாய்வலப்பால் ஒண் கொன்றை
வடமால் இடந்துகில் தோல் வலம் ஆதிஇடம் வலம்மான்
இடமால் கரிதால் வலஞ்சேது இவனுக்கு எழில் நலஞ்சேர்
குடமால் இடம்வலங் கொக்கரை யாம் எங்கள் கூத்தனுக்கே.
சங்கரநாராயணரின் இடப்பாகத்தில் துளசிமாலை, பட்டாடை அணிந்து சக்கரத்தை ஏந்தி கருநிறமுடைய பெருமாள் குடக்கூத்து ஆடுகிறார். கொன்றை மாலை, தோல் ஆடை அணிந்து, மானை கையில் ஏந்தி செந்நிறமுடைய சிவபெருமான் கொக்கரைக் கூத்தும் ஆடுகிறார் என பொன்வண்ணத்தந்தாதியில் பாடுகிறார் நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமாள்.