குடகனாற்றில் கருப்பணசாமி சிலை மீட்பு
ADDED :1150 days ago
செம்பட்டி: வக்கம்பட்டி அருகே குடகனாற்றில் கிடந்த கருப்பணசாமி சிலையை, வருவாய்த்துறையினர் மீட்டனர்.
ஆத்தூர் ஒன்றியம் வக்கம்பட்டியிலிருந்து கும்மம்பட்டி செல்லும் ரோட்டின் குறுக்கே, குடகனாற்று பாலம் அமைந்துள்ளது. நேற்று இப்பகுதியில் மணலில் புதைந்த நிலையில் சுவாமி சிலை ஒன்று கிடப்பதை இப்பகுதியினர் பார்த்தனர். வி.ஏ.ஓ., ரமேஷ் தலைமையில் சென்ற அதிகாரிகள், சுமார் 5 அடி உயரம் உள்ள கருப்பண சுவாமி சிலையை மீட்டனர். அதன் கண்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில் மண் மேவி இருந்தது. அதனை சுத்தப்படுத்திய வருவாய் துறையினர், ஆத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். கண்கள் கட்டப்பட்ட நிலையில் சிலை மணலில் புதைந்து கிடந்தது தொடர்பாக, பல்வேறு வதந்திகள் இப்பகுதியில் பரவி வருகிறது.