மேலப்பசலை வைகுண்டநாத பெருமாள், விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
மானாமதுரை: மானாமதுரை அருகே மேலப்பசலையில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வைகுண்டநாத பெருமாள், விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலப்பசலை ஸ்ரீதேவி பூதேவி சமேத வைகுண்டநாத பெருமாள் மற்றும் விநாயகர் கோவில் திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்காக நேற்று முன் தினம் காலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. இதனைத் தொடர்ந்து நேற்று காலை கும்பாபிஷேக விழாவிற்காக புனித நீர் அடங்கிய கடங்களை அர்ச்சகர்கள் மேள,தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலை சுற்றி வலம் வந்து கோபுர கலசங்களுக்கு கொண்டு சென்று புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.இதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.தீபாராதனை நடைபெற்றது.கோயில் வளாகத்தில் அன்னதானமும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் மேலப்பசலை மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மேலப்பசலை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.