திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா துவங்கியது
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மட்டுமே ஆயுள் விருத்திக்காக திருமணங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும். இந்த சிறப்பு பெற்ற கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழாவையொட்டி கொடியேற்றம் இன்று நடைபெற்றது. விநாயகர், அபிராமி அம்மன், சண்டிகேஸ்வரர் சாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினார். பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் கட்டளை தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் பூஜைகளை கணேச குருக்கள் தலைமையிலானோடு செய்து வைத்தனர் இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 21-ம் தேதி தேரோட்டம் திருவிழாவும், 22 -ம் தேதி அபிராமி அம்மன் ஆடிப்பூர தீர்த்த வாரி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் மணி, உள்துறை கண்காணிப்பாளர் விருதகிரி ஆகியோர் செய்து வருகின்றனர்.