ஆடி அமாவாசை; தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஏராளமானோர் புனித நீராடி தரிசனம்
தேவிபட்டினம்: ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் கடலுக்குள் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், திருமண தடை குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஆண்டுதோறும் ஆடி, தை அமாவாசை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். இந்த நிலையில் இன்று ஆடி அமாவாசை தினம் என்பதால், நவபாஷாண கடற்கரையில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி நவக்கிரகங்களை சுற்றி வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். நவபாஷாணத்தை நிர்வகித்துவரும் இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் பழனி குமார், உதவி ஆணையர் ஞானசேகரன் தலைமையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. செயல் அலுவலர் நாராயணி, எழுத்தர் தங்கவேல் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் பக்தர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.