தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு
தேவிபட்டினம்; ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு, இன்று தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்யப்படுவதால், ஏராளமான பக்தர்கள் பரிகார பூஜைகள் செய்வதற்கு வந்து செல்கின்றனர். ஆடி, தை அமாவாசை தினங்களில், ஆண்டு தோறும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக இங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில், இன்று ஆடி அமாவாசை என்பதால், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நவபாஷாணத்தில் புனித நீராட குவிந்தனர். அதிகாலை முதல் கடலில் நீராடி, நவக்கிரகங்களை சுற்றி வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.