ஆலங்குளம் கிருஷ்ணன் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :823 days ago
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே ஆலங்குளம் கிராமத்தில் உள்ள பாமா ருக்மணி சமேத கிருஷ்ணன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. விழாவில் அஷ்ட பந்தனம், கோஷ்டி பாராயணம், கோ பூஜை, சூரிய நமஸ்காரம், பூர்ணாகுதி உள்ளிட்டப் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலை 10:00 மணியளவில் கோபுர விமான கலசத்தில் திருப்புல்லாணி ரகுபதி ஐயங்கார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர், மகா கணபதி, சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை யாதவர் இளைஞர் சங்கத்தினர் மற்றும் ஆலங்குளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.