உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்தி விழா: செப்.10ல் கொடியேற்றம்

பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்தி விழா: செப்.10ல் கொடியேற்றம்

பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் சதுர்த்திப் பெருவிழா செப்.10ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

தமிழகத்தின் பிரசித்திப் பெற்ற நகரத்தார் கோயிலான கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் நடைபெறும். நாளை காலை கோயிலில் அனுக்ஞை பூஜைகளும், மாலையில் அங்குரார்ப்பணம் உள்ளிட்ட  பூர்வாங்க பூஜைகளும் நடைபெறும். மறுநாள், செப்.10  காலையில் கொடிமரத்திற்கும், கொடிப்படத்திற்கும் பூஜைகள் நடந்து கொடியேற்றமும், மாலையில் சுவாமிக்கு காப்புக்கட்டியும் சதுர்த்தி விழா துவங்குகிறது.  அன்று  இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் உற்ஸவ கற்பகவிநாயகர் திருவீதி வலம் வருவார். மறுநாள் முதல் தினசரி காலையில் வெள்ளி கேடகத்தில் உற்ஸவர் புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும். செப்.15ல் மாலையில் கஜமுக சூரசம்ஹாரம் நடைபெறும். செப்.18ல் காலையில் சுவாமி தேருக்கு எழுந்தருளலும், மாலையில் தேர் வடம் பிடித்தலும் நடைபெறும். அன்றைய தினம் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தை மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை பக்தர்கள்  தரிசிக்கலாம். செப்.19ல் காலையில் கோயில் திருக்குளத்தில் அங்குசத்தேவருக்கு  விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி நடைபெறும். மதியம் 2:00 மணி அளவில் மூலவருக்கு முக்கூருணி மோதகம் படையலிடப்படும். இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும். மாலையில் கலைநிகழ்ச்சிகள்,ஆன்மீக உரை,இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி  பழ.கரு.லெ.ராம.சா.தண்ணீர்மலை மற்றும் காரைக்குடி முரு.வீர.சா.க.சாமிநாதன் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !