ராமேஸ்வரத்தில் குவிந்த மகராஷ்டிரா பக்தர்கள்; பஜனை பாடி வழிபாடு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நடக்கும் பஜனையில் மகாராஷ்டிரா பக்தர்கள் ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
மகாராஷ்டிரா எல்லோரா சேர்ந்த ஜெய் பாபாஜி பக்த பரிவார் அமைப்பு சார்பில் 7 நாள்கள் பஜனை நடத்துகின்றனர். இதில் சுவாமி சாந்திகிரி மகராஜ், பக்தர்களிடம் சனாதனம், சமூக பணிகள் குறித்து விளக்கி, ஆன்மிக பக்தி பாடல் பாடினார். இதில் மகராஷ்டிரா சேர்ந்த பக்தர்கள் ஆயிரம் பேர் பங்கேற்று உள்ளனர். இவர்கள் தினமும் தியானம் செய்து, ராமேஸ்வரம் கோயில் ரதவீதி, அக்னி தீர்த்த கடற்கரையில் உழவாரப்பணி மேற்கொண்டனர். மேலும் பஜனை நடக்கும் 7 நாட்களிலும் பக்தர்கள் சிலர் மவுன விரதம், உணவு இன்றி தண்ணீர் பருகி விரதம் இருந்தனர். இன்று நடந்த பஜனை இறுதி நாளில் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., பார்வையாளர் முரளிதரன் பங்கேற்று பேசியதாவது : சனாதனம் என்பது பூஜை, சுவாமி கும்பிடுவது மட்டும் அல்ல. மக்களுக்கான சமூக பணிகள் செய்து மக்களிடம் ஓழுக்கம், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஆகும். சனாதனத்தை ஒழிப்போம் என்பவர்கள் விரைவில் காணாமல் போய் விடுவார்கள் என்றார்.