தேனூர் அம்மனுக்கு பட்டு, மாலை வழங்கி முஸ்லிம்கள் நேர்த்திக்கடன் வழிபாடு
ADDED :762 days ago
சோழவந்தான்: சமயநல்லூர் அருகே தேனூர் சுந்தரவள்ளி அம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் அம்மனுக்கு முஸ்லிம்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். இக்கோயில் விழா செப்.,19ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்தனர். மாலை அம்மன் வீதி உலாவும், இரவு தீச்சட்டி, பொங்கல் வைத்து, உருண்டு கொடுத்தல் நடந்தது. இன்று காலை முளைப்பாரி ஊர்வலத்துடன் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதிகளில் எழுந்தருளினார். சேத்தாண்டி வேடம் அணிந்து வந்தவர்களுக்கு பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய இளைஞர்கள் சர்பத் வழங்கி வரவேற்றனர். முஸ்லிம் தாய்மார்கள் நேர்த்திக்கடனாக அம்மனுக்கு பட்டு, மாலை உள்ளிட்ட பொருட்கள் வழங்கி வழிபாடு செய்தனர். சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.